Monday, 21 April 2014

சமூக வலைதளங்களின் தவறான விளைவுகள்


                    




டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் பல நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்பட காரணமாக இருந்துள்ளன. சில நாடுகளில் ஆட்சி மாற்றங்களுக்கு உதவியாக இருந்தன. குறிப்பாக எகிப்து நாட்டில் புரட்சி ஏற்பட காரணமாக இருந்தது டிவிட்டர்தான். அதற்காகவே டிவிட்டரின் சேவை எகிப்தில் முடக்கப்பட்டது. துருக்கி நாட்டில் டிவிட்டர் மூலம், அந்நாட்டில் நடந்து வந்த ஊழல்கள் குறித்தும், அதில் பிரதமர் குடும்பத்தின் தொடர்பு குறித்தும் கருத்துகள் வெளியிட்ட வண்ணம் இருந்தனர், பொதுமக்கள்.

இதனால், அதை சகித்து கொள்ளும் தன்மையில்லாத மக்களை காக்க வேண்டிய அரசு, அந்நாட்டின் பிரதமர் செசெப் தாயிப் எர்டோகன், டிவிட்டரின் செயல்பாட்டிற்கு தடை விதித்தார். இதனால், டிவிட்டர் தளம் கடந்த மார்ச் மாதம் முடங்கியது. இந்தியாவில் முசாபர்நகரமே பற்றி எரிந்தபோது சமூக வலைதளங்களில் அதில் தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டிய பணியை செய்ய வேண்டியவர்கள், பெட்ரோல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியதுதான் கொடுமை. பல குழந்தைகள் கொல்லப்பட்டனர். 

பாதிக்கப்பட்டவர்கள் சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியாமல் இன்றளவும் முகாமில் முடங்கி கிடக்கின்றனர். ஏசி அறையில் அமர்ந்து சிலர் தவறான செய்தியை பரப்ப சமூக வலைதளங்களை பயன்படுத்தியதன் விளைவு, அப்பாவி மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். சமூக வலைதளங்கள் புரட்சிக்கு மட்டுமல்ல மனிதனின் உயிரை காப்பாற்றும் நோக்கில், ரத்த தானம், கண் தானம் உள்ளிட்ட தகவல்கள் கூட சமூக நோக்கத்துடன் ஒருவருக்கு ஒருவர் பறிமாறிக் கொள்கின்றனர். இதன் மூலம் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன என்பது நிகழ்கால வரலாறு. 

ஆனால், தவறானவர்கள் கையில் அது கிடைத்தால் என்ன ஆகும் என்பதற்கு கேரளாவில் சமீபத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் குற்றவாளிகள் பிடிபடுவதற்கும், அந்த நவீனமே பயன்பட்டுள்ளது. ஆனால், அதற்கு கொடுத்த விலைதான் அதிகம். ஆமாம், 2 அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படும் வாட்ஸ்அப், பல்வேறு புரட்சிகளை செய்து வருகிறது. மருத்துவம், மீடியா, காவல் துறை, ஐடி துறையில் உள்ளவர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

இந்த வாட்ஸ்அப் என்ற நவீனத்தை கொலைக்கு பயன்படுத்தி உள்ளார் ஒரு பெண். கேரளாவைச் சேர்ந்த அவர், ஒரு பெண் குழந்தைக்கு தாய். தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில், பணியாற்றும் ஆணுடன் தொடர்பு. அதை வழக்கம்போல கண்டித்தனர் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர். அதற்காக அந்தபெண் செய்ததுதான் கொடுமையின் உச்சகட்டம். தன் மொபைல் போனில் வீட்டின் உள்புறம் மற்றும் தப்பியோடும் வழிகளை போட்டோ எடுத்து, அதை வாட்ஸ்அப்மூலம் கள்ளக்காதலனுக்கு அனுப்பி உள்ளார். 

எப்படி வீட்டிற்குள் வரவேண்டும், கொலை செய்து விட்டு தப்ப எந்த வழிகள் உள்ளன என்பதை வரைபடமாக எடுத்தும் அனுப்பி உள்ளார். இதை பயன்படுத்திய  கள்ளக்காதலன், கத்தியால் அந்தப் பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் 4 வயது குழந்தை ஆகியோரை குத்தினார். குழந்தையும், மாமியாரும் இறந்துவிட்டனர். ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் கோடி மதிப்பில் பேஸ்புக் வாங்கிய வாட்ஸ்அப், கள்ளக்காதலர்களின் கொலைக்கும் பயன்பட்டதுதான் வேதனை. 

சேவைக்கும், புரட்சிக்கும் பயன்படுத்தப்பட்ட சமூக வலைதளத்தை, தன் கள்ளக்காதலுக்காக பயன்படுத்தி கொண்ட சம்பவம் பல்வேறு கலாசாரத்தில் ஊறி திளைத்த இந்தியாவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

தெனாலிராமன் விமர்சனம்

தெனாலிராமன்

  • நடிகர் : வடிவேலு
  • நடிகை : மீனாட்சி தீட்சித்
  • இயக்குனர் :யுவராஜ்

இடையில் இரண்டு வருடங்கள் தன் அதிரடி அரசியல் முடிவுகளால், திரையில் காமெடி நடிகராகக் கூட காலம் தள்ள முடியாமல் காணாமல் போயிருந்த வைகைப்புயல் வடிவேலு, இம்சை அரசன் 23ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்களுக்கு அப்புறம் கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் தெனாலிராமன்.

36 மனைவிகள், 52 குழந்தைகள் என பிரமாண்ட குடும்பத்துடன், ஒன்பது அமைச்சர்களின் கட்டுப்பாட்டில், விகடநகரத்தை விட்டுவிட்டு அரண்மனையிலும், அந்தப்புரத்திலும் குதூகல வாழ்க்கை வாழ்ந்து வரும் மன்னர் ஒரு வடிவேலு! மன்னர் வடிவேலுவுக்கு தெரியாமல் விகடநகரம் நாட்டையே கபளீகரம் செய்ய நினைக்கும் சீன வணிகர்களுக்கு, துணை போகும் குறுநில மன்னர் பரஸ்பரம் ராதாரவியுடன், நகருக்குள் சீன வணிகர்களை அனுமதித்து, கொள்ள லாபம் பார்க்கின்றனர் மீதி எட்டு அமைச்சர்களும்!

மன்னர் வடிவேலுக்கு அமைச்சர்கள் விஷயத்தில் நவரத்தினங்கள் எனும் 9ம் எண் தான் ராசி என்பதால், ஒருநாள் அந்த அமைச்சர் பதவிக்கு, இந்த ஊழல் எட்டு அமைச்சர்கள் புடைசூழ, மன்னர் வடிவேலு தலைமையில் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது. எட்டு அமைச்சர்களின் சதியையும் மீறி அதில் கலந்து கொண்டு தன் புத்திசாலிதனத்தால் வெற்றி பெறுகிறார் தெனாலிராமன் எனும் மற்றொரு வடிவேலு!

ஒழுங்காக ராஜ்ஜியம் செய்யாமல், சீன வணிகர்களுக்கு இடம் கொடுத்து, மக்களை பசி பட்டினியில் வாடவிடும் மன்னர் வடிவேலுவை கொல்லும் நோக்குடன் அந்த ராஜ்ஜியத்துக்குள் அமைச்சராக அடியெடுத்து வைக்கும் புரட்சிபடை வீரராக தெனாலிராமன் வடிவேலு., ஒரு சில நாட்களிலேயே மன்னர் வடிவேலு வெகுளி..., அவரை ஆட்டி வைப்பது அந்த எட்டு அமைச்சர்களும் தான்... என்பதை தன் புத்திசாலிதன்தால் கண்டுபிடித்து, சீன வணிகர்களிடமிருந்தும், சுயலாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட துஷ்ட, அஷ்ட அமைச்சர்களிடமிருந்தும், ராஜ்ஜியத்தையும், ராஜாவையும் காபந்து செய்வதும், புதிதாக தானும், மன்னரும் உள்ளிட்ட ஒன்பது அமைச்சர்களை உழைக்கும் உண்மைவர்க்கத்தில் இருந்து பொறுக்கி எடுத்து, விகடநகரத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதும் தான் தெனாலிராமன் படத்தின் கதை, களம் எல்லாம்! இதனூடே தெனாலிராமன் வடிவேலுவுக்கும், மன்னர் வடிவேலுவின் மூத்த மகள் மாதுளை எனும் மீனாட்சி தீக்ஷித்துக்கும் இடையேயான காதலையும், கசிந்துருகலையும் கலந்து கட்டி, காமெடியாக, கலர்புல்லாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.

தெனாலிராமன், வெகுளி மன்னன், என இருவேறு பாத்திரங்களில் வடிவேலு வழக்கம்போலவே கம்பீரமாக கலகலப்பு ஊட்டியிருக்கிறார். அதிலும் தெனாலிராமனாக வடிவேலு செய்யும் புத்திசாலித்தன (பானைக்குள் வந்த யாதை உள்ளிட்ட தெனாலிராமன் கதைகள் ஏற்கனவே நமக்கு தெரியும் என்பதால்..) சேட்டைகளை விட, வெகுளி மன்னராக, முட்டாள் தனமாக, 36 மனைவிகளுடனும், 52 குழந்தைகளுடனும் மன்னர் வடிவேலு பண்ணும் லூட்டிகள் செம காமெடி! காமெடி நடிகர் என்றாலும் சில இடங்களில் இரண்டு வடிவேலுகளும் கதாநாயகர்களையே மிஞ்சும் விதத்தில் செய்திருக்கும் செயற்கரிய காரியங்களுக்காகவும், கொடுக்கும் லுக்குகளுக்காகவும் தெனாலிராமன் படத்தை ஒன்றுக்கு இரண்டு முறை பார்க்கலாம்! ஒருசில இடங்களில் மன்னர் வேடங்களில் ஜொலித்த எம்.ஜி.ஆரை மாதிரி தெரிகிறார் வடிவேலு என்பது இப்படத்திற்கு பெரிய ப்ளஸ!

மாதுளையாக வரும் கதாநாயகி மீனாட்சி தீக்ஷித்தும், அவரது கவர்ச்சியும் ஆகட்டும், மற்ற 36 மனைவிகளாகட்டும், பரஸ்பரம் ராதாரவி, ஜி.எம்.குமார், சண்முகராஜ், பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி, நமோ நாராயணன், ஜோ மல்லூரி, சக்திவேல், செல்லதுரை, சந்தானபாரதி உள்ளிட்ட அமைச்சர்கள் ஆகட்டும், ராஜேஷ், புரட்சிபடை போஸ் வெங்கட், திருட்டு கும்பல் தலைவன் பெசண்ட் ரவி, மனிதகறி மன்சூர் அலிகான், கிங்காங், தேவதர்ஷினி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருப்பது தெனாலிராமன் படத்திற்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறது.

புரட்சிப்படை தலைவர்கள் காலம் கணிந்து வரும் வரை ஒழிந்து கொண்டு இருப்பது கூட தவறில்லை... எனும் தமிழ் உணர்வுள்ள ஆரூர் தாஸின் வசனவரிகள், டி.இமானின் எழுச்சியூட்டும் இசை, ராம்நாத் ஷெட்டியின் உயிரோட்டமுள்ள ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், யுவராஜ் தயாளனின் எழுத்து-இயக்கத்தில், ஒருசில குறைகள் இருப்பினும் தெனாலிராமன் வெறும் சிரிப்பு படம் மட்டுமல்ல, இன்றைய காலக்கட்டத்திற்கும் ஏற்ற சிந்தனையை தூண்டும் படமும் கூட.

ஆகமொத்தத்தில், தெனாலிராமன் - சிறுவர்களுக்கும், ஏன்? பெரியவர்களுக்கும் கூட திகட்டாத கருத்துள்ள காமெடி மாமன்(னன்)!

எகிறும் ஓட்டுப்பதிவு; கலங்கும் தமிழக கட்சிகள்



லோக்சபா தேர்தலில், இதுவரை நடந்த ஐந்து கட்டத் தேர்தலில், சராசரியாக, 68 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. இதன் எதிரொலி, ஆறாம் கட்டமாக தேர்தல் நடக்கும், தமிழகத்திலும் இருக்கும். குறிப்பாக, பலமுனை போட்டி நிலவுவதால், ஓட்டு சதவீதம் இதுவரை நடந்த தேர்தல்களை விட, கூடுதலாக இருக்கும் என, கணிக்கப்படுகிறது.

நக்சல்களின் மிரட்டல்

நாட்டில் உள்ள, 543 லோக்சபா தொகுதிகளுக்கு, ஒன்பது கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட ஓட்டுப்பதிவு, ஏப்ரல் 7ம் தேதி துவங்கியது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்துள்ளன. யூனியன் பிரதேசங்கள், கேரளா, அரியானா, டில்லி, ஒடிசா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், ஜம்மு - காஷ்மீர், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சிலவற்றில், முழுமையாகவும், ஒருசில மாநிலங்களில், பகுதியாகவும் தேர்தல்கள் முடிந்துள்ளன.ஐந்து கட்ட தேர்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 232 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளன. இன்னும் நான்கு கட்ட தேர்தல்கள் மீதமுள்ளன. இத்தேர்தல்களில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், 311 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளன.இதுவரை ஓட்டுப்பதிவு முடிந்துள்ள, 232 தொகுதிகளில், சராரியாக, 68 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

நக்சல்களின் மிரட்டல் அதிகம் உள்ள பகுதிகள் என, கூறப்படும் சத்தீஸ்கர், ஒடிசா போன்ற மாநிலங்களில், 75 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. எப்போதும் பதற்றமாக உள்ள, காஷ்மீர் மாநிலத்தில் கூட, ஓட்டுப்பதிவு 82 சதவீதமாக உள்ளது.கேரளா, அரியானா மாநிலங்களில், 71 சதவீத மக்கள் ஓட்டு போட்டு உள்ளனர். மக்களின் இந்த ஆர்வம், மாற்றத்தை எதிர்நோக்கி செல்வதாக, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மாற்றத்தை விரும்பி

மேலும், முதல்முறையாக, புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை, 10 கோடியைத் தாண்டியுள்ளது. இளம் வாக்காளர்கள், மாற்றத்தை பெரிதும் விரும்பி, ஓட்டளித்து வருகின்றனர் என்றும் கணிக்கின்றனர். இதுவரை நடந்த தேர்தலில், ஓட்டுப்பதிவு அதிகரித்ததற்கு, புதிய வாக்காளர்கள் அதிகளவில் ஓட்டு அளித்ததும் காரணம் என்கின்றனர்.ஒரு யூனியன் பிரதேசம், நான்கு மாநிலங்களில் ஓட்டு போட்டவர்களில், ஆண்களை விட பெண்கள் அதிகம் என, தெரியவந்து உள்ளது. லட்சத்தீவில் பதிவான, 86.6 சதவீத ஓட்டுகளில், பெண்கள் 88.5 சதவீதம். பெண்கள் அதிகம்இதேபோல், சிக்கிமில் பதிவான, 80.9 சதவீத ஓட்டுகளில், பெண்கள் 81.5 சதவீதம் பேர். அருணாசல பிரதேசம், கோவா, மேகாலாயா மாநிலங்களிலும், பெண்கள் அதிகளவு ஓட்டு அளித்து உள்ளனர்.நாடு சுதந்திரம் அடைந்த பின், நடந்த தேர்தல்களில், இந்த தேர்தல் போல, ஆண்களை விட பெண்கள் அதிகளவில் ஓட்டு அளித்ததில்லை. பெண்கள் அதிகளவு ஓட்டு போட்டது, இதுவே முதன்முறை என, தகவல்கள் வெளியாகி உள்ளன.

விலைவாசி உயர்வால் ஏற்பட்ட பாதிப்பு, குடும்பத் தலைவியான பெண்ணை கடுமையாக பாதித்துள்ளது. அதனால், மாற்றத்தை பெண்கள் அதிகளவு விரும்புகின்றனர். எனவே, பெண்கள் அதிகளவு ஓட்டு போட்டுள்ளனர் என, தேர்தலை கூர்ந்து கவனித்து வரும், சமூக ஆர்வலர்கள் கூடுதல் ஓட்டுப்பதிவு குறித்து கருத்து கூறுகின்றனர்.புதிய வாக்காளர்கள், பெண்களின் ஓட்டு, முதல் ஐந்து கட்ட தேர்தலில் அதிகரித்து உள்ளது. இதன் எதிரொலி, அடுத்து நடக்க உள்ள, நான்கு கட்ட தேர்தலிலும் இருக்கும் என, எதிர்பார்க்கின்றனர். தமிழகம் போன்ற மாநிலங்களில், பலமுனைப் போட்டி நடக்கிறது. இதில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., கூட்டணி இடையே, கடும் போட்டி நிலவுகிறது. மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களின் ஓட்டுப்பதிவு சதவீதம், அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் அதுபோன்ற நிலையே இருக்கும் என, தெரிவிக்கின்றனர்.

பெரும் சோகம்

அப்படி இருக்கும்பட்சத்தில், மாற்றத்தை விரும்கிறவர்கள், ஏற்கனவே ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக, ஓட்டளிக்கும் மனநிலையோடு வந்து ஓட்டளிப்பர் என்பது தான், அரசியல் நோக்கர்களின் கருத்து. அதனால், தமிழகத்தில் காங்கிரசுக்கு பெரும் தோல்வி பரிசாக கிடைக்கும் என்றும், அவர்கள் கணிக்கின்றனர். அதேபோல, தேர்தல் களத்தில் சரியாக முடிவெடுக்காமல், தனித்து போட்டியிடும் இடதுசாரிகளுக்கும், இந்த தேர்தல் முடிவுகள் மூலம் மாற்றத்தை விரும்பும் மக்கள், பெரும் சோகத்தை ஏற்படுத்துவர் என்றும், அவர்கள் தெரிவிக்கின்றனர்.